User Info

IP Address
38.107.191.100
United States United States

Who's Online

We have 4 guests online

Impressions total:61089
2. தலைமைக்குத் தேவை - தொலை நோக்குப் பார்வை! PDF Print E-mail
Sunday, 25 January 2009 15:25
Vision என்பது ஒரு அருமையான ஆங்கிலச் சொல். இதனை தொலை நோக்குப் பார்வை என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கலாம். இந்தச் சொல் குறித்து ஆங்கில அகராதி கூறுவதென்ன? : "The ability to think about or plan the future with great imagination and intelligence" (SYN: foresight)தொலை நோக்குப் பார்வை என்பது அபரிமிதமான கற்பனைத் திறனுடனும், அறிவாற்றலுடனும் - எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் திட்டமிடவும் வல்ல திறமைக்குப் பெயராகும். இதனை அகப் பார்வை என்றும் அழைக்கலாம்.

இந்தத் தொலை நோக்குப் பார்வை - சமுகத் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், மேலாளர்கள், குடும்பத் தலைவர்கள் - இப்படி எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்களுக்கும் மிக அவசியம் ஆகும்.

இறைத் தூதர்கள் இப்படிப்பட்ட அகப் பார்வை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று அல்லாஹுதஆலா தனது திருமறையிலே குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

 

உள் ஆற்றலும் (
inner strength), அகப் பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூறுவீராக! (38: 45). அரபியிலே அல்லாஹ் அவர்களை "உலில் அய்தீ வல் அப்ஸார்" என்று குறிப்பிடுகின்றான்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகச் சிறந்த தொலை நோக்குப் பார்வை உடையவர்களாய் விளங்கினார்கள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுதஆலாவினால் "மனித குலத் தலைவராக" (இமாமுன் லின்னாஸ்) தேர்வு செய்யப்பட்டவர்கள். ஏக இறைத் தத்துவத்தை எடுத்து இயம்பியதால் நெருப்புக் குண்டத்தைச் சந்தித்தவர்கள். அக்கிரமக்கார அரசன் நம்ரூதையே தனது அழகிய விவாதத்தினால் வாயடைக்கச் செய்தவர்கள். கொள்கைக்காக நாடு துறந்தவர்கள். படைத்த இறைவனுக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்திட்டவர்கள். இறுதி மூச்சுள்ள வரை வயதான காலத்திலும் நாடு விட்டு நாடு சென்று இறை மார்க்கத்தை நிலைநாட்டிட அயராது பாடுபட்டவர்கள். உண்மையை, சத்தியத்தைக் கண்டு பிடித்திடுவதில் (
intellectual curiosity) ஊக்கம் மிக்கவர்கள். அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம், விவேகம் (wisdom) - இவற்றுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இப்ராஹீம் நபிக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவர் - இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்; மற்றவர் - இஸ்ஹாக் (அலை). இப்ராஹீம் நபியின் இரு புதல்வர்களுமே இறைத்தூதர்கள் தாம். இப்ராஹீம் நபியின் அயராத உழைப்புக்குப் பின்னரும் - குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கூட மக்கள் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. அவர்கள் நாடு நகரம் எல்லாம் சுற்றி அலைந்தார்கள். பிறந்த நாடான ஈராக்கை விட்டு வெளியேறிய அவர்கள் எகிப்துக்குச் சென்றிருக்கிறார்கள். சிரியாவுக்கும், சிரியாவின் வடக்கே அமைந்துள்ள ஹர்ரான் (Harran) வரைக்கும் கூடச் சென்று திரும்பி இருக்கிறார்கள். ஃபலஸ்தீனில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். பின்பு அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் உள்ள மக்காவுக்கும் வந்து சென்றிருக்கிறார்கள். 4000 - ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் - எப்படிப்பட்ட "வாகன வசதியைப்" பெற்றிருந்திருப்பார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினம் அல்லவே?

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 175 வயது வரை வாழ்ந்தார்கள் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இளமையாக இருந்த கால கட்டத்தில் அவர்களை அல்லாஹ் "மனித குலத் தலைவர் நீங்கள்!" என்று அறிவித்திடவில்லை. மூன்று பெரும் சோதனைகளின் முடிவுக்குப் பின்னரே அந்த "இமாம்" எனும் பட்டம் அவர்களுக்கு வழங்கப் பட்டது. அந்த மூன்று பெரும் சோதனைகள் என்னென்ன? ஒன்று - நெருப்புக் குண்டம். இரண்டு - மனைவி ஹாஜரா அவர்களையும் மகன் இஸ்மாயில் அவர்களையும் பாலைவன மக்காவில் தன்னந் தனியாக விட்டு விட்டுத் திரும்புதல். மூன்று - பெற்ற மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற இறைக் கட்டளை. இந்த மூன்றாவது சோதனையான - இஸ்மாயிலைப் பலியிடும் கட்டளை இறைவனிடம் இருந்து இடப்பட்ட சமயம் நிச்சயமாக இப்ராஹீம் நபியின் "முதுமையான" கால கட்டத்தில் தான்.

வயதோ - முதுமையை எட்டி விட்டது. மக்களோ இறை மார்க்கத்தை ஏற்றிடத் தயாராக இல்லை. என்ன செய்வது? எதிர்காலம் என்னவாகும்? தமக்குப் பின்னர் தமது வழித்தோன்றல்கள் - அடுத்த தலைமுறையினர் - என்ன செய்திட வேண்டும்? எங்கிருந்து அவர்கள் பணியாற்றிட் வேண்டும்? திட்டமிடுகிறார்கள். தொலை நோக்கோடு ஒரு நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ, அல்லாஹ் "நீங்கள் தான் மக்களின் தலைவர்" என்று அறிவித்திட்ட போது - என்னுடைய சந்ததிகளையும் (இந்த வாக்குறுதி) சாருமா? என்று உடனேயே இறைவ்னிடத்தில் கேட்டு விட்டார்கள்! அந்த நீண்ட காலத்திட்டம் தான் என்ன?

மக்காவிலே இறையில்லம் ஒன்றினை தமது மகன் இஸ்மாயிலின் துணையுடன் நிறுவி அங்கே இருந்து கொண்டு பணீயாற்றிட தனது மகனைப் பணிக்கின்றார்கள். தனது இன்னொரு மகனான இஸ்ஹாக் அவர்களை ஃபலஸ்தீனில் த்ங்கிடச் செய்கின்றார்கள். தமது அண்ணன் மகன் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை டிரான்ஸ் ஜோர்டான் எனும் பகுதிக்கு அனுப்பி அங்கிருந்து கொண்டு பணீயாற்றிடப் பணிக்கின்றார்கள். இப்ராஹீம் நபியவர்களோ மகன் இஸ்ஹாக்குடனேயே தங்கி இறுதியில் அங்கேயே ஹிப்ரான் எனும் இடத்தில் வாழ்ந்து மறைகின்றார்கள்.

இந்த அருமையான திட்டத்தைத் தான் நாம் "தொலை நோக்குப் பார்வை" என்கிறோம்! அவர்களின் இந்தத் தொலை நோக்குப் பார்வைக்கு திருமறை குர் ஆன் வசனம் ஒன்றே சான்றாகக் காட்டிடப் போதுமானது.

"எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்." (குர்ஆன் 2: 129)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த துஆ எப்போது நிறைவேறியது தெரியுமா? சுமார் 2800 ஆண்டுகளுக்குப் பிறகு தான்! ஆனால் அவர்களுடைய தொலை நோக்குப் பார்வையின் விளைவுகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள். பனீ அஸ்ராயில் சமுகம், அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள், பைத்துல் முகத்திஸ் எனும் நமது முதல் கிப்லா, கஃபதுல்லாஹ்வாகிய நமது கிப்லா, குர் ஆனை உள்ளடக்கிய நான்கு இறை வேதங்கள், இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், உம்மத் முஹம்மதிய்யா என்று அழைக்கப் படும் நமது சமுகம் (நமக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்களே நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தாம்!), ஹஜ்ஜின் அடையாளச் சின்னங்கள்.... என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

அடுத்து முஹம்மது நபியவர்களின் தொலை நோக்குப் பார்வை குறித்து சுருக்கமாக மட்டும் இப்போது பார்ப்போம்.

அண்ணல் நபியவர்கள் மக்காவில் அழைப்புப் பணியைத் துவக்கி ஒரு சில ஆண்டுகளே ஆகியிருக்கும். அப்போது ஒரு சிலரே இஸ்லாத்தின் அணியில் சேர்ந்திருந்தனர். மக்கத்துக் குறைஷிகள் அந்த துவக்க கால முஸ்லிம்களை சொல்லொனாத அளவுக்குக் கொடுமைக்குட்படுத்திய கால கட்டம் அது. அப்படிக் கொடுமைக்குள்ளானவர்களுள் கப்பாப் பின் அல் அரத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். ஒரு தடவை அவர் நபியவர்களைக் கஃபாவின் நிழலுக்கருகே காண்கிறார்கள். எங்களுக்காக உதவி செய்திட அல்லாஹ்வைத் தாங்கள் கேட்கக் கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நபியவர்களின் முகம் சிவந்து விடுகிறது. அப்போது அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

உங்களுக்கு முன்னால் வாழ்ந்த நம்பிக்கையாளர்களும் இதை விட அதிகமான கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டவர்களே! குழி ஒன்றைத் தயார் செய்து அதில் அவர்களை அமர வைத்து இரம்பத்தால் - தலைமுதல் கால் வரை - இரு கூறாகப் பிளக்கப் பட்டார்கள். இரும்பு சீப்பினால் அவர்களின் எலும்புகளிலிருந்து சதைகள் கிழித்தெரியப் பட்டன. ஆனால் இவை யாவும் அவர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அழைப்புப் பணி முழுமை அடைய அதிக காலம் ஆகாது. அப்போது ஒரு பயணி யமனின் தலைநகரமான சன்ஆவிலிருந்து புறப்பட்டு ஹள்ரமவுத் வரை சென்று சேர்வார் - அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவராக!

அதைப் போலவே - அவர்கள் மதினாவில் ஆட்சியாளராக வாழ்ந்த கால கட்டத்திலும் - அவ்ர்களது தொலைநோக்கு சிந்தனை எப்படி இருந்தது தெரியுமா? அது அகழ்ப் போருக்கு நபியவர்களும் நபித்தோழர்களும் அகழ் ஒன்றைத் தோண்டி ஒண்டிருந்த சமயம்.

இதோ ஒரு நபித்தோழரே சொல்வதைக் கேட்போம்.

அகழ் தோண்டும் போது எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் "பிஸ்மில்லாஹ்" என்று கூறி ஓர் அடி அடித்து விட்டு "அல்லாஹ் மிகப் பெரியவன், ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு வழங்கப் பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்" என்றார்கள்.

பின்பு இரண்டாம் முறையாக அப்பாறையை அடித்தார்கள். "அல்லாஹ் மிகப் பெரியவன், பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்கு கொடுக்கப் பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கிறேன்" என்றார்கள்.

பின்பு மூன்றாம் முறையாக "பிஸ்மில்லாஹ்" என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப் பட்டது. அப்போது நபியவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன், எஅனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப் பட்டன. அல்லஹ்வின் மீது சத்தியமாக, எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கிறேன்" என்றார்கள்.

 

சரி, நபித்தோழர்களில் தொலைநோக்குப் பார்வை உடையவர்களைப் பார்ப்போம்.

அபூ பக்ர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதும் - மூன்று முக்கியமான முனைகளிலிருந்து - சோதனை! போலி நபிமார்கள் பிரச்னை ஒரு பக்கம். தொழுவோம் ஆனால் ஜகாத் தரமாட்டோம் என்று ஒரு பிரிவினர் அடம் பிடித்தனர். இன்னும் சில கூட்டத்தார்கள் மதினாவைத் தாக்கிடத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் - அண்ணல் நபியவர்களின் மரணத்துக்கு முன்னர் தயார் நிலையில் ரோம தேசம் நோக்கிப் புறப்பட இருந்த பனிரெண்டாயிரம் வீரர்களை - அந்த முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அவர்களை ரோம தேசம் நோக்கி அனுப்பி விட்டார்கள் - பதவியேற்ற உடனேயே! ஒரு பக்கம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட சற்று நிதானித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்ல - கலீஃபாவாக அபூ பக்ர் அவர்கள் உறுதியுடன் செயல் பட்டது, பிரச்னைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது - இவைகளை ஆய்வு செய்திடும் போது அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சரி, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எடுத்துக் கொள்வோம். குர் ஆனை மனனம் செய்த ஹாஃபிள்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய போது - குர் ஆனை நூல் வடிவில் ஒன்று திரட்ட வேண்டும் என்ற ஆலோசனை வழங்கியது - அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்குச் சான்று அல்லவா? .

அடுத்து, இஸ்லாமிய வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் - நமது வரலாறு நெடுகிலும் - காலித் பின் வலித்,சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி - போன்ற தூர நோக்குச் சிந்தனை உடைய தலைவர்களை நாம் காண முடிகிறது.

 

ஆனால் - இன்று அப்படிப் பட்ட தலைவர்கள் எங்கே என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் திருப்பெயர்களீல் ஒன்று: அல் - பஸீர் ஆகும். இதற்கு "மிக நன்றாகப் பார்க்கக் கூடியவன்" என்று பொருள் தரலாம். திருமறை குர்ஆனிலே அல்லாஹ்வைக் குறித்திட இச்சொல் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இச்சொல்லுக்கு "தொலை நோக்குப் பார்வை உடையவன்" என்றும் பொருள் தரலாம். அதாவது அல்லாஹ் தொலை நோக்குப் பார்வை உடையவனாக விளங்குகிறான் என்றும் இச்சொல்லுக்கு நாம் விளக்கம் அளிக்கலாம்.

திருக்குர்ஆனிலே அல்லாஹ் - தான் தொலை நோக்குப் பார்வை உடையவன் என்பதை பல சான்றுகளுடன் விளக்கியிருக்கின்றான்.

"பார்வைகள் அவனை அடைய முடியா. ஆனால் அவனோ எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகின்றான். (6: 103)

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பதெல்லாம் நமக்குத் தான். ஆனால் இறைவனின் பார்வையைப் பொறுத்தவரை எல்லாம் அவன் முன்பு - தெள்ளத்தெளிவாக!

இறைவனின் திட்டத்தை முழுமையாக அறிந்தவர் யாருமில்லை என்றாலும், இறைவனுக்கு மகத்தானதொரு பார்வையும், திட்டமும் இருக்கின்றது என்பது திருமறையை முழுவதும் ஆய்வு செய்தால் புரியும்.

அல்லாஹ்வின் குணங்களாக உங்கள் குணங்களை ஆக்கிக் கொள்ளுங்கள் (தஃகல்லகூ பி அஃக்லாகில்லாஹ்..) என்பது நபிமொழி. அப்படியென்றால் என்ன? சான்றாக - அல்லாஹ் கருணையாளனாக இருக்கிறான் என்றால் நாமும் கருணை உள்ளம் கொண்டவர்களாக விளங்கிட வேண்டும். அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான் என்றால், நாமும் மன்னிக்கும் தன்மை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்பது தான்.

அது போலவே அல்லாஹ் - தொலை நோக்குப் பார்வை உடையவனாக இருக்கிறான் என்றால், நாமும் நமது வரையரைக்கு உட்பட்டு - தொலை நோக்குப் பார்வை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்பது தான் இறைவனின் எதிர்பார்ப்பு!

தொலை நோக்குப் பார்வை என்பது தனி மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் மட்டும் அன்று. அது எல்லாவிதமான நிறுவங்களுக்கும், ஏன் - அரசாங்கங்களுக்கும் கூட அவசியம்.

ஒருவருக்கு தொலை நோக்குப் பார்வை இல்லாவிட்டால் என்னவாகும்?

1. தொலை நோக்குச் சிந்தனை இல்லாதவன் - பயனற்ற காரியங்களில் மூழ்கியிருப்பான்.

2. எதை முந்திச் செய்ய வேண்டுமோ அதை பிந்திச் செய்து கொண்டிருப்பான். பின்னால் செய்ய வேண்டியதை முந்திச் செய்து கொண்டிருப்பான்.

3. ஏராளமான பொருள் மற்றும் பொன்னான நேரங்களை - வீணடித்துக் கொண்டிருப்பான். .

4. செய்த தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்வதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பான்.

5. புதிய சவால்களை எதிர்கொள்ளும் திராணி இருக்காது. செக்கு மாட்டு வாழ்க்கை தான் வாழ நேரிடும்.

 

மாறாக தொலை நோக்குப் பார்வை உடையவர்கள்

1. சோம்பேறிகளாக இருக்க மாட்டார்கள்.

2. பொறுப்பற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.

3. நீண்ட காலத் திட்டம் வகுத்து செயல் படுவார்கள்.

4. கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்வார்கள்.

5. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக விளங்குவார்கள்.

6. மற்றவ்ர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஆர்வம் மிக்கவ்ர்களாய் இருப்பார்கள்.

7. பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார்கள்.

இவை நிறுவனங்களுக்கும் பொருந்தும்!

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி?

உங்களுடைய வயது இப்போது என்ன? முப்பதுக்குள் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உங்களின் அறுபதாவது வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள், எவைகளை சாதித்து முடித்திருப்பீர்கள்?

கற்பனை செய்யுங்கள்! கனவு காணுங்கள்! கற்பனைக்கு அளவே இல்லை! எனவே உங்கள் கனவை சுருக்கி விடாதீர்கள்! சரி தானே!

www.counselormansoor.com

 
© 2008 - 2009 CounselorMansoor.com
Site Designed and Hosted by MohamedHusain.com